Thursday, April 6, 2017

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு

பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்று துவங்கியுள்ள நிலையில், இன்று (ஏப்., 6) முதல் திருத்தும் பணியை புறக்கணிப்பதாக, மேல்நிலை பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

விடைத்தாள் மதிப்பீடு செய்ய நாள் ஒன்றுக்கு வழங்கும் விடைத்தாள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, ஏற்கனவே பி.ஜி., ஆசிரியர்கள் சங்கம் ஒன்று, திருத்தும் பணியை புறக்கணிப்பதாக அறவித்தது.

இதையடுத்து தமிழ், ஆங்கிலம் தவிர பிற பாடங்களில் நாள் ஒன்றுக்கு 22ல் இருந்து 20 விடைத்தாளாக குறைக்கப்பட்டது, திருத்தும் மதிப்பூதியம் உயர்த்துவது உட்பட ஆசிரியர்களின் கோரிக்கையை தேர்வுத் துறை நேற்று ஏற்றதால், புறக்கணிப்பு கைவிடப்பட்டது.

இந்நிலையில், கணினி ஆசிரியர்களின் ஒரு கோரிக்கைகூட நிறைவேறாததால், திருத்தும் பணியை அவர்கள் இன்று முதல் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் சவுந்திரராஜன் கூறியதாவது:

பி.ஜி., ஆசிரியர்கள் போல் கணினி ஆசிரியர்களும் கல்வி செயலர், இயக்குனர் என தொடர்ந்து மனுக்கள் அளித்தோம். பிற பாடங்கள் ஆசிரியர் கோரிக்கைகளை தேர்வுத்துறை ஏற்றுள்ள நிலையில், நாள் ஒன்றுக்கு 20 விடைத்தாள் என்பதை 15 ஆக குறைப்பது, உழைப்பூதியம் 3.75 ரூபாயிலிருந்து ஆறு ரூபாயாக உயர்த்த வேண்டும் உட்பட கணினி ஆசிரியர்களின் எந்த கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. இதனால் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க உள்ளோம், என்றார்.

விடைத்தாள் திருத்தும் பணி துவக்க நாளான நேற்று முதன்மை மற்றும் கூர்ந்தாய்வாளர் திருத்தினர். இதில் கணினி ஆசிரியர்கள் பங்கேற்றனர். இன்று உதவி தேர்வாளர் திருத்தும் பணி துவங்குகிறது. இந்நிலையில் கணினி ஆசிரியர்களின் ஒரு சங்கத்தினர் புறக்கணிப்பால், கணினி இயக்க செயல்பாடுகள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது

No comments:

Post a Comment